புறவழிச்சாலை குறித்து எம்.எல்.ஏ., பேச்சு பல்லடம் வட்டார மக்கள் குழப்பம்!

பல்லடம், : சட்டசபையில், புறவழிச் சாலை அமைப்பது குறித்து, பல்லடம் எம்.எல்.ஏ., பேசியது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் நகரம், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதாலும், திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி, கொச்சி, தாராபுரம் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ் சாலையுடன் இணைவதாலும், நகரப் பகுதியில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்லடம் - வெள்ளகோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும், பல்லடம் நகரப் பகுதியில் சாலையை விரிவுபடுத்த தேவையான இடவசதி இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்ட பின்னும், நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.

கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட கரூர்- - கோவை பசுமைவழிச் சாலையும், காளிவேலம்பட்டி -- மாதப்பூர் வரையிலான புறவழிச் சாலையும் கிடப்பில் போடப்பட்டது. மேலும், இந்த புறவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் சென்றதால், ஒதுக்கப்பட்ட, 195 கோடி ரூபாய் நிதியும் திருப்பி அனுப்பப்பட்டது. இவ்வாறு இருக்க, சமீபத்தில் நடந்த சட்டசபை மானிய கோரிக்கையின் போது பேசிய பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன், '195 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட காளிவேலம்பட்டி- மாதப்பூர் புறவழிச் சாலை திட்டம் என்ன ஆனது,' என்று கேள்வி எழுப்பினார்.

பல்லடம் -- கொச்சி ரோடு முதல் மாதப்பூர் வரை புதிய புறவழிச்சாலை அமைக்க ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்ட காளிவேலம்பட்டி - - மாதப்பூர் புறவழிச்சாலை திட்டம் குறித்தும், 195 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது குறித்தும் ஆனந்தன் பேசியது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்தத் திட்டம் வரப்போகிறது என்று தெரியாமல் குழம்பியுள்ள பல்லடம் மக்களுக்கு, எம்.எல்.ஏ.,வின் பேச்சு, மேலும் குழப்பத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Advertisement