வைகை அணை அருகே புதிய அணை தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தகவல்

தேனி: ''வைகை அணை அருகே கூடுதல் நீர்தேக்கப்படும் வகையில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கை தயாராகி வருகிறது,'' என, தேனியில் தி.மு.க., எம்.பி., தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்

அவர் கூறியதாவது: மத்திய அரசு லோக்சபா தொகுதி மறுவரையறையை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்ய வேண்டும். 'தொகுதிகள் குறையாது' என, மத்திய அமைச்சர் அமித்ஷா கோவையில் கூறியுள்ளார். ஆனால் லோக்சபாவில் பதில் அளிக்க மறுக்கிறார். இந்தியாவில் 1971க்கு முன்பு வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தொகை விகிதாசாரம் சரியாக இருந்தது. அரசின் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை தமிழகம் சிறப்பாக செயல்படுத்தியது. மணிப்பூரில் இரு எம்.பி.,க்கள் மட்டும் உள்ளதால் அவர்கள் பிரதிநிதித்துவம் குறைகிறது. அதே போல் தமிழகத்தில் தொகுதிகளை குறைத்தால் மாநில வளர்ச்சி பாதிக்கும். இதற்காக தொகுதி மறுவரை செய்யக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். தற்போதைய கருத்துகணிப்புகள் தேர்தலுக்கு முன்பு மாறும்.

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது. இதனை திண்ணை பிரசாரமாக மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரினால் மத்திய அரசு பதில் அளிப்பதில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என கூறிய அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி, அமித்ஷாவை சந்திக்கிறார். இதிலிருந்து முதுகெலும்பு இல்லாத கட்சி அ.தி.மு.க., என மக்கள் புரிந்து கொள்வர்.

சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பானது தி.மு.க., கூட்டணி. ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு சென்றால் மட்டும் சிறுபான்மையினர் வாக்களிக்க மாட்டார்கள்.

வைகை அணையை துார்வார ரூ.450 கோடி முதல் 500 கோடி செலவாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செலவில் துார் வாருவதற்கு பதில் அருகில் புதிய அணை கட்டலாம் எனவும் கூறுகின்றனர். கூடுதல் நீர்தேக்கும் வகையில் நீர்த்தேக்கப்பகுதிக்கு அருகில் புதிய அணை கட்ட அறிக்கை தயாராகி வருகிறது என்றார்.

Advertisement