மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் நடந்தது.
இரவு 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கி இரவு 12:00 மணி வரை நடந்தது.
கோவில் பூசாரிகள், பக்தர்கள் அம்மன் தாலாட்டு பாடல்கள் பாடினர்.
ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில் செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சனி, ஞாயிறு, ரம்ஜான் என மூன்று நாள் தொடர் விடுமுறையால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தினர். பக்தர்களின் வசதிக்காக சென்னை, காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், கடலுார் உட்பட பல ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.