25 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,

சென்னை,
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டப்படி, சர்வே எண் வாரியாக நில வகைப்பாடு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிட்டுள்ள வகைப்பாட்டுக்கு மாற்றாக, வேறு தேவைகளுக்காக கட்டுமான திட்டங்களை செயல்படுத்த நினைத்தால், அதற்கு முன் வகைப்பாடு மாற்ற வேண்டியது அவசியம்.

அதன்படி, தங்கள் நிலத்துக்கான வகைப்பாட்டை மாற்ற விரும்புவோர், அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் மீது, பொது மக்கள் கருத்து, தொழில்நுட்ப குழுவினரின் கருத்து பெற்று, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் குழும கூட்டத்தில் இறுதி முடிவு எடுப்பர்.

அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 25 இடங்களில் நில வகைப்பாடு மாற்ற, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.

சென்னை, புரசைவாக்கம் தாலுகாவில், இரண்டு இடங்களில் நிறுவன பயன்பாடு என்ற வகைப்பாட்டில் உள்ள நிலங்களை, குடியிருப்பு வகைப்பாட்டுக்கு மாற்றக் கோரி, தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் விண்ணப்பித்துள்ளது.

இது மட்டுமல்லாது, 13 இடங்களில், விவசாய நிலங்களை குடியிருப்பு உள்ளிட்ட பிற வகைப்பாட்டுக்கு மாற்ற, அவற்றின் உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

அதன் அடிப்படையில், இந்த விண்ணப்ப விபரங்கள், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில், பொது மக்கள் தங்களது ஆட்சேபனை மற்றும் கருத்துகளை, 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

Advertisement