தேர்வு பணியா; எமிஸ் பணியா ஒரே நேரத்தில் இரண்டா; புலம்பும் தலைமை ஆசிரியர்கள்

மதுரை: பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் எமிஸ் பணிகளும் மேற்கொள்ள வேண்டும்' என்று தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களுக்கு எமிஸ் பணி இல்லை என்ற பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு என்னாச்சு என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம் ஆகியன நடக்கின்றன. மதுரையில் முகாம்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 2016 -2017 முதல் 2024 - 2025 வரை உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கான 7.5 சிறப்பு ஒதுக்கீட்டில் இதுவரை பயனடைந்தவர்கள், தகுதியுள்ளோர் குறித்த விவரம், அவர்கள் எந்தப் பள்ளியை சேர்ந்தவர், என்ன மீடியத்தில் படித்தவர்கள் என எமிஸில் பதிவேற்றிய தகவல்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோல் அடிப்படை வசதிகள், மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பள்ளியின் பிரத்யேக தகவல்கள் அடங்கிய 'யுடைஸ்' 'யுடைஸ் பிளஸ்' (யு.டி.ஐ.எஸ்.இ.,) தகவல்களையும் ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு, விடைத்தாள் திருத்தும் பணியின்போது இதுபோன்ற எமிஸ் பணிகளையும் எவ்வாறு மேற்கொள்வது என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: இப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என கல்வி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். 'மார்ச் 1 முதல் எமிஸ் பணிச்சுமையில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்' என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அப்பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வற்புறுத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் எமிஸ் பணியை மேற்கொள்வது முடியாத காரியம்.

ஏராளமான ஆசிரியர் பயிற்றுனர்கள் (பி.ஆர்.டி.இ.,) உள்ளனர். அவர்களை இப்பணியில் ஈடுபடுத்தலாம். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (டி.சி.,) பணிக்கு கூட ஒரு ஆசிரியரைத்தான் கூடுதல் பொறுப்பாக நியமித்துள்ளனர். தற்போது எமிஸ் பணிகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என்றனர்.

Advertisement