படிக்கும்போது கசக்கும்; ஜெயிக்கும்போது இனிக்கும்

'நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிப்பது எப்படி?' எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:

எந்த பட்டப்படிப்பை தேர்வு செய்து, வேலைவாய்ப்பு தேடினாலும், பிரச்னைக்குத் தீர்வு காணும் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். படிப்பை தாண்டி உங்களிடம் என்ன திறமை உள்ளது என்பதற்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர்.

நீட் தேர்ச்சிபெற கேள்வியை முழுமையாக புரிந்து கொள்ளும் திறன் வேண்டும்; அப்போதுதான், பதிலை சரியாக எழுத முடியும். புத்தகத்தில் இருக்கும் கேள்விகளுக்கு மட்டும் விடை எழுத தெரிந்தால் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற முடியாது.

ஜே.இ.இ., தேர்வுகளை எதிர்கொள்ள சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். பயிற்சி, படிக்கும் காலம் கஷ்டமாக தெரிந்தாலும், தேர்ச்சி பெற்றால் சிறக்க போவது நீங்கள் தான். போட்டித்தேர்வுகளில் நேர மேலாண்மை மிக முக்கியம்.

எனக்கு கணக்கு வராது என்ற மனப்பான்மையை விட்டு முதலில் வெளியே வாருங்கள். படிப்பில் ஜெயித்தால் நிஜத்தில் ஜெயிக்க முடியும். அறிவுசார் திறன், ஜெயிக்க, சாதிக்க உதவும். நீங்கள் ஜெயித்து பதவி, பணம் சம்பாதித்தால் தான் பெற்றோர் மகிழ்ச்சி அடைவர். நண்பர்கள், உறவினர்கள் மதிப்பார்கள்.

நீங்கள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த அடிப்படை கணிதம், அறிவியலே போட்டித் தேர்வுகளுக்கு கேள்வியாக அமைகிறது. அதனை நாம் சரியாக, புரிந்து படிக்காததால், தற்போது மீண்டும் 'அப்டேட்' செய்து படிக்க வேண்டியுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதிலும், தேர்வெழுத ஆர்வம் காட்டுவதிலும் ராஜஸ்தான், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, உ.பி., டில்லி மாநிலங்கள் முதன்மை இடங்களில் உள்ளது. மத்திய அரசின் முதல் தர கல்வி நிறுவனங்களின் நுழைவுத்தேர்வுகளுக்கு, தமிழக மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பிப்பதில்லை. தயக்கம், அச்சமின்றி நுழைவுத்தேர்வுகளிலும் பங்கேற்றால் தான், பல கல்லுாரிகளில் வாய்ப்பு கிடைக்கும்.

Advertisement