சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்தால் சங்கடங்கள் விலகும் ஆன்மிகப் பேச்சாளர் நாகை முகுந்தன் யோசனை

மதுரை சுந்தர காண்டத்தை பயபக்தியுடன் பாராயணம் செய்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் விலகும் என ஆன்மிகப் பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன் பேசினார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி எஸ்.எம்.கே., திருமண மண்டபத்தில் கம்பராமாயண சொற்பொழிவு நடந்து வருகிறது. நேற்று நாகை முகுந்தன் 'தவம் செய்த தவம்' என்ற தலைப்பில் பேசியதாவது: கம்பன் தனது காவியத்தில் தெய்வீக பாத்திரங்களுக்கு ஓர் அடைமொழியை கொடுக்கிறான். ராமபிரானுக்கு 'அறத்தின் நாயகன்' என்றும், சீதாபிராட்டிக்கு 'தவம் செய்த தவம்' என்றும் கொடுக்கிறான், சீதாபிராட்டி அசோகவனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையை, ராமனை குறித்த தவமாகவே கருதி சீதைக்கு தவம் செய்த தவம் என்கிறான்.

இதனைக் கூறும் சுந்தரகாண்டத்தின் சிறப்பே ராம நாமத்தின் சிறப்பை கூறுவது. ராம நாமத்தை சொல்லி அனுமன் கடலை கடந்தான். எனவே ராமனைக் காட்டிலும் உயர்ந்தது ராம நாமம்.

அனுமன் கடலை கடக்கிற போது மூன்று தடைகள் ஏற்பட்டன. அந்த மூன்று தடைகளை அனுமன் எப்படி வென்று கடந்தானோ அதேபோல நாமும் வாழ்க்கைப்பாதையை கடக்கிற போது தடை வரும். அந்த வேதனையை மன உறுதியோடு வெல்ல வேண்டும். சில நேரம் உண்மையான தடை அல்லது பகை வரலாம். அதனை தெய்வத்தின் அருளால் வெல்ல வேண்டும் என்பதையே சுந்தரகாண்டம் நமக்கு கூறுகிறது.

அனுமனின் வாலில் ராவணன் தீ வைத்தான். இச்செய்தி சீதையை அடைந்தவுடன், 'நான் குற்றம் அற்றவள் என்றால் அனுமனை இந்தத் தீ ஒன்றும் செய்யக்கூடாது' என்று அக்னி பகவானை பிரார்த்தனை செய்தாள். உடனே அனுமன் குளிர்ச்சியை உணர்ந்தான். இதன் மூலம் சீதாபிராட்டியும் குற்றமற்றவள் என்று உணர்த்தப்படுகிறது.

சுந்தரகாண்டத்தை பயபக்தியுடன் பாராயணம் செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். இவ்வாறு அவர் பேசினார். ஏற்பாடுகளை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Advertisement