வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம்; ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் அமளி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.



ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானத்தை ஆளும் தேசிய மாநாடுக்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். அதை சபாநாயகர் அப்துல் ரஹிம்லாதர் நிராகரித்தார். இதனால் 3வது நாளாக அவையில் கடும் அமளி நிலவியது.


அதே நேரத்தில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மெகராஜ் மாலிக் என்பவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. மெகராஜ் மாலிக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பா.ஜ., எம்.எல்.ஏ., விக்ரம் ரந்தாவா, அவர் இந்துகளை அவமதித்துள்ளார் என்று கூறினார்.

இதையடுத்து, அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கூச்சல் எழுப்பினர். சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்ட அவர்கள், தொடர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பம் நீடித்த நிலையில் அவையை நடத்த முடியாத சூழல் காணப்பட்டது. இதை தொடர்ந்து மதியம் 1 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.


இதனிடையே, சட்டசபை வளாகத்தில் ஆம் ஆத்மி எம். எல்.ஏ., மெகராஜ் மாலிக், பா.ஜ., உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் மூண்டது. மெகராஜ் மாலிக் மீது தாக்குதல் நடத்தப்பட, அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் அகற்றினர். இதனால் அங்கு சிறிதுநேரம் கடும் குழப்பமான சூழல் நிலவியது.

Advertisement