உதயநிதிக்காக போடப்பட்ட விழா மேடை - பந்தல் பிரிப்பு

1

கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, கடந்த மாதம் 23ல் தமிழக துணை முதல்வர் உதயநிதி கோவைக்கு வருவதாக இருந்தது.

இதையடுத்து, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் நுழைவாயில் கோட்டை போல் அலங்கரிக்கப்பட்டு, மேடை, பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

அதைச் சுற்றிலும் கொடி, போஸ்டர், பிளக்ஸ் என தயாராக இருந்த நிலையில், திடீரென 22ம் தேதி இரவு 7:00 மணியளவில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், 30ல் நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சி நடக்க ஏற்பாடாகி இருந்த மேடைக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினமும், 'ஷிப்டு' முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எதிர்பார்க்கப்பட்டது போல, கடந்த 30ம் தேதியும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. அடுத்து, வரும் 13ல் நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதனால், மேடைக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்தது.

இதுதொடர்பாக, கடந்த 3ல், நம் நாளிதழில் படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. விழா பந்தலுக்கு, 10 நாட்களுக்கும் மேலாக போலீசார் காவல் காத்ததும், தொடர்ந்து 10 நாட்களுக்கு காவல் இருக்கப் போகும் தகவலும் கசிந்து, சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால், மேடையை உடனடியாக அகற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதையடுத்து நுழைவாயில் அலங்காரம், பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு, விழா மேடை மற்றும் பந்தல்கள் பிரிக்கப்பட்டன.

Advertisement