பிரதமர் மோடி பங்கேற்ற பாம்பன் பால திறப்பு விழா: முதல்வர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

79


ராமநாதபுரம்: பிரதமர் மோடி பங்கேற்ற பாம்பன் பால திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருந்தால், தமிழகத்துக்கு நன்மை கிடைத்திருக்கும்; கேலி, கிண்டல் செய்யப்படுவதையும் முதல்வர் தவிர்த்து இருக்க முடியும்.


ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை நேற்று முன்தினம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழக அரசையும், ஆளும் தி.மு.க.,வினரையும் கேலி, கிண்டல் செய்யும் வகையில் பேசினார்.

தமிழகத்திலிருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்து இடுவதாக அவர் கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க., அரசியல் செய்து வரும் நிலையில் அதற்கு பதில் அளிப்பது போல், பாடத்திட்டங்களை தி.மு.க., அரசு தமிழில் கொண்டு வர வேண்டும் என்றும் பேசினார்.



ஒருவேளை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருந்தால், மேடை நாகரிகம் கருதி பிரதமர் மோடி இப்படி தி.மு.க.,வினரை கேலியும், கிண்டலுமாக பேசியிருக்க வாய்ப்பில்லை.
மத்திய அரசிடம் வைத்திருக்கும் பல கோரிக்கைகளை பரிசீலிக்கவே இல்லை என தொடர்ந்து கூறிவரும் முதல்வர், பாம்பன் விழாவில் பங்கேற்று இருந்தால், மக்கள் முன்னிலையில் நேரடியாக மேடையில் பிரதமரிடம் கோரிக்கைகளை வைத்திருக்க முடியும். தமிழகத்துக்கு நன்மைகளைப் பெற்று இருக்க முடியும்.



இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின், தனது மூத்த சகோதரர் என்று கூறிக் கொள்ளும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாணியை பின்பற்றியிருக்கலாம். ஸ்டாலினை போலவே, மோடியை கடுமையாக எதிர்த்தாலும் கேரளாவில் பிரதமர் கலந்து கொள்ளும் எந்த அரசு நிகழ்ச்சியையும், பினராயி விஜயன் தவறவிடுவது இல்லை. விமான நிலையம் சென்று பிரதமரை வரவேற்று, மேடையில் பிரதமரோடு பங்கேற்று கேரள அரசின் தேவைகளை பட்டியலிட்டு பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement