மாரியம்மன் கோயிலுக்கு அக்னிசட்டி எடுத்த பக்தர்கள் ஆஹோ… அய்யாஹோ… கோஷமிட்ட பக்தர்கள்

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது ஆஹோ… அய்யாஹோ பக்தி கோஷம் விண்ணை எட்டியது.

பங்குனி பொங்கல் விழா மார்ச் 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன், வெயிலுகந்தம்மனுடன் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளினர். பெண் பக்தர்கள் விழா துவங்கிய நாள் முதல் இரவு முழுவதும் குடங்களில் தண்ணீர் சேகரித்து கொடிமரத்திற்கு ஊற்றி வழிபட்டனர். ஏப். 6ல் கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

விரதமிருந்த பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் அக்னிசட்டி ஏந்தி வந்தனர். நேற்று இரவு வரை இது தொடர்ந்தது. 11, 21 என தீ சட்டிகளை பக்தி பரவசத்துடன் ஏந்தி வந்தனர். இதோடு கரும்பு தொட்டில் குழந்தை, காவடி, கயிறு குத்து, கரும்புள்ளி, செம்புள்ளி, காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவை யொட்டி விருதுநகரில் எங்கும் பக்தர்களின் ஆஹோ அய்யாஹோ கோஷம் விண்ணை எட்டியது. கோயிலிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.

Advertisement