தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தென்காசி : தென்காசி உலகம்மன், காசிவிஸ்வநாதர் கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.

தென்காசி உலகம்மன், காசிவிஸ்வநாதர் கோயில் 578 ஆண்டுகள் பழமையானது. 2006 மார்ச்சில் கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்.,3ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று ஏப்.,7 அதிகாலை 3:00 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடந்தன. 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் எழுந்தருளல் நடந்தது.

9:00 மணிக்கு மேல் கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் பச்சை கொடியை அசைக்க உலகம்மன், காசிவிஸ்வநாதசுவாமி கோயில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூல ஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் தீபாராதனை நடைபெற்றது. ஆலாலயசுந்தர வேதசிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாணசுந்தர சிவாச்சாரியார் தலைமை வகித்தார். கும்பாபிஷேகத்தை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.

விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி எம்.பி., ராணி ஸ்ரீகுமார், எம்.எல்.ஏ.,க்கள் தென்காசி எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் ஈ.ராஜா, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement