'ரேஷன் கடை வாக்குறுதியை நிறைவேற்றுமா அரசு'

ஸ்ரீவில்லிபுத்துார் : 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி ரேஷன் கடைகள் அனைத்தையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக முழுவதும் கூட்டுறவு துறையின் மூலம் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும், நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும் உள்ளன. 2.2 கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரே பணி இரு துறை மூலம் செய்யப்படுவதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

2021 சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. . தேர்தல் வாக்குறுதி எண் 236ல் தமிழ்நாட்டில் பல துறைகளில் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என கூறப்பட்டிருந்தது. நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் என 2 பணியிடங்கள் உள்ளன. ஆனால் கூட்டுறவு துறையின் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் ஒருவர் மட்டுமே இரண்டு வேலைகளையும் செய்து வருகிறார். பல கடைகளில் கூடுதல் பணியாகவும் பணியாற்றுகின்றனர்.

எனவே ரேஷன் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். கூட்டுறவுதுறை ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2019 முதல் அரசு ஊழியர்களுக்கும், தங்களுக்கும் இடையே 3 சதவீத டி.ஏ.குறைபாட்டை சரி செய்ய வேண்டுமென ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement