தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்:வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை:'' தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 - 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்,'' என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.



இதுகுறித்து, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பி. அமுதா கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியின் மைலாடி, கொட்டாரம் பகுதியில் தலா 6 செ.மீ., கன்னிமார், மாம்பழத்துறையாறு பகுதிகளில் தலா 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


வெப்பநிலையை பொறுத்த வரை அதிகபட்சமாக வேலூரில் 38.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 21.5 டிகிரி செல்சியசும் பதிவாகியது.


நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மாலை 5:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து இன்று காலை 8:309மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.


இன்று( ஏப்.,10) முதல் 12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் புறநகரில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிபட்ச வெப்பநிலை 36- 37 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Advertisement