ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் ரயிலில் அடிபட்டு மூன்று பேர் பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு மூன்று பேர் பலியாகினர்.

சென்னை - திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில், நேற்று காலை திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ், 35 வயதுள்ள ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது, அவ்வழியாக வந்த மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

அதேபோல், புட்லூர் - செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தை கடந்த 35 வயதுள்ள ஆண் ஒருவர், விரைவு ரயிலில் அடிபட்டு பலியானார். மேலும், செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், சடலங்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், இறந்தவர்கள் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement