பொது மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் 'சீரியஸ்'

ஆவடி, அம்பத்துார், டீச்சர்ஸ் காலனியில் உள்ள மகளிர் விடுதியில் வசிப்பவர் சத்யா, 38. இவரது கணவர் ஜெபராஜ், 42. இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. சத்யா, ஜெபராஜ் இருவரும் கருத்து வேறுபாடால், கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர்.

சத்யா, ஆவடி அடுத்த கன்னடபாளையம், பஜனை கோவில் தெருவின் முதல் தளத்தில் 'அமுதா கார்மெண்ட்ஸ்' என்ற பெயரில், ஆடை உற்பத்தி தொழில் செய்து வருகிறார். அங்கு 15 பெண்கள் பணிபுரிகின்றனர். நேற்று விடுமுறை என்பதால், ஐந்து பெண்கள் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் சத்யாவின் கார்மெண்ட்ஸு-க்கு வந்த ஜெபராஜ், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும், சத்யா மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

சத்யா அலறி கூச்சலிட்டார். தடுக்க வந்த ஊழியர்கள் மீதும் ஜெபராஜ் பெட்ரோல் ஊற்றிய போது, அவர்கள் வெளியே தப்பி ஓடினர். அந்த தீ கார்மெண்ட்சில் பரவி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், இருவரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்தில், அங்கிருந்த துணிகள் எரிந்து நாசமாகின. ஆவடி பேக்டரி பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement