மண்டியிட்டது தி.மு.க., தான் தமிழக பா.ஜ., பதிலடி

கோவை: ''ரெய்டுக்கு பயந்து மண்டியிட்டது தி.மு.க., தான்,'' என, முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் இரு கட்சிகள் கூட்டணி வைத்துவிட்டால், தி.மு.க.,வுக்கு உதறல் எடுத்துவிடும். 2011 சட்டசபை தேர்தலின்போது, மேல் தளத்தில் ரெய்டு விட்டு, கீழ்த் தளத்தில் கூட்டணிப் பேச்சு நடத்தி, தி.மு.க.,வை மண்டியிட செய்து, பணிய வைத்தது காங்கிரஸ். அக்கட்சியோடு தான் இன்று நீங்கள் கூட்டணி வைத்துள்ளது தி.மு.க.,

ஏற்கனவே இப்படி, கட்சியை அடகு வைத்த அனுபவம் இருப்பதால், அதை பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியோடு ஒப்பிட்டு சந்தோஷம் காண்கிறார் ஸ்டாலின்.

போதை கலாசாரம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, அதிகார துஷ்பிரயோகம் என, மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சியை, வீட்டுக்கு அனுப்பி, ஆன்மிக பூமியான தமிழகத்தை, ஹிந்து விரோத தி.மு.க.,விடம் இருந்து மீட்பதே, எங்கள் நோக்கம்.

பிரிவினைவாத தி.மு.க.,வை எதிர்க்கும், அனைத்துக் கட்சிகளும் ஒரே குடையின் கீழ் இயங்கத் துவங்கி இருப்பது, தி.மு.க.,வுக்கு கிலியை உண்டாக்கியிருக்கிறது.

எப்படியாவது இந்தக் கூட்டணியைத் தடுத்துவிட வேண்டும் என, கனவு கண்டு கொண்டிருந்தவர்கள், இப்போது படுதோல்வியை நினைத்து புலம்ப ஆரம்பித்துஇருக்கிறார்கள்.

கனிமொழி புலம்புவதற்கு வார்த்தையே கிடைக்காமல், தேச துரோகம் எனப் புலம்பியது பயத்தின் உச்சம். இடைவிடாது, தேசப்பிரிவினை கருத்துகளை விதைத்துக் கொண்டிருப்பது தி.மு.க.,தான்.

தேசநலனில் அக்கறை கொண்ட கட்சிகள், தி.மு.க.,வை வீழ்த்த கைகோர்த்தவுடன், பயத்தில் தி.மு.க., பிதற்றத் தொடங்கியிருக்கிறது. காங்., - தி.மு.க., செய்த துரோகத்துக்கு, வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க, மக்கள் தயாராகி விட்டார்கள். அதன் முன்னோட்டம்தான் அண்ணன், தங்கை புலம்பல்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement