அரசியல்வாதி வீட்டில் வேலை செய்பவருக்கு அரசு சம்பளம்: அரசு மருத்துவர் கொந்தளிப்பு

9

திருநெல்வேலி: தென்காசியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய வேண்டிய பணியாளர், உள்ளூர் அரசியல்வாதி வீட்டில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அரசு, சம்பளம் அளித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு டாக்டர் வெளியிட்ட ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


டெங்கு காலத்தில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப்பணி தற்போதும் நடந்து வருகிறது. இதற்கான பணியாளர்கள் பஞ்சாயத்து யூனியனால் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான சம்பளத்தை யூனியனே வழங்கி வருகிறது. ஆனால், பணியாளர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். வருகைப்பதிவேடும் சுகாதார நிலையங்களிலேயே உள்ளது.


சம்பளத்தை பஞ்சாயத்து யூனியன் வழங்குவதால், யூனியன் சேர்மன் வீடு அல்லது அவர் சொல்லும் வீடுகளில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு சம்பளம் கொடுக்கும் நிலையில், பணியாளர்கள் தனி நபர்களின் வீடுகளில் பணியாற்றி வருவதற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது.


இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணிக்காக நான்கு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அவர்களில் ஈஸ்வரன் என்பவர் மட்டும், அங்குள்ள உள்ளூர் அரசியல்வாதி வீட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 18 மாதங்களாக அவர் பணிக்கு வராத நிலையிலும் அவருக்கு அரசு சம்பளம் வழங்கி வருகிறது.

இதனால், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர் டாக்டர் முத்துக்குமார் என்பவர் ஈஸ்வரனுக்கு மாற்றாக முத்துமாரியம்மாள் என்பவரை நியமித்தார். இவர் மார்ச் மாதம் முழுதும் பணியாற்றிய நிலையில் அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மாறாக ஈஸ்வரனுக்கே சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளதாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர் டாக்டர் முத்துக்குமார் குற்றம்சாட்டி ஆடியோ வெளியிட்டு உள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இந்த ஆடியோ தொடர்பாக தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தனிடம் கேட்ட போது, ' ஆடியோ வந்தது உண்மை தான். இது குறித்து விசாரணை நடக்கிறது. யார் எங்கு பணியாற்றுகின்றனர். சம்பளம் எப்படி வழங்கப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடக்கிறது', எனத் தெரிவித்தார்.
தென்காசியில் 9.02 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 16 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருந்தது. இது வேறு நாள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. தென்காசியில் நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement