தி.மு.க., ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்: நம்பிக்கையுடன் காலணி அணிந்த அண்ணாமலை

40


சென்னை: ''தேசிய ஜனநாயகக் கூட்டணி, தி.மு.க., ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்'' என பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட பா.ஜ., சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.

நேற்றைய தினம், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டசபை தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, தி.மு.க., ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்.



என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த பா.ஜ., சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது.


நயினார் நாகேந்திரன் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.வாழ்க தமிழ். வளர்க பாரதம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement