சென்னையில் அமைச்சர் விழாவில் போலீஸ்காரர் மீது தி.மு.க.வினர் தாக்குதல்; அண்ணாமலை கண்டனம்

2

சென்னை: சென்னையில் அமைச்சர் பங்கேற்க இருந்த விழாவில் போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


@1brஇதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை;


சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த போலீஸ்காரர் காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த தி.மு.க.,வினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.


காவல்துறையினரை தாக்கும் அளவுக்கு தி.மு.க.,வினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம்.


அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல் துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது தி.மு.க.,வின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.


சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் தி.மு.க.,வினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர்?


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார். தமது எக்ஸ் வலை தளத்தில் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளையும் அண்ணாமலை இணைத்து வெளியிட்டுள்ளார்.

Advertisement