நீர், உலக உயிர்களுக்கு இறைவன் அளித்த வரப்பிரசாதம்: தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

5

சென்னை:ஸ்ரீ காஞ்சி சங்கராச்சார்யார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பூர்வாஸ்ரம தந்தையார், ஸ்ரீ முக்காமலா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இன்று ஏப்ரல் 14ம் தேதி தண்டலம் கிராமத்தில் ஸ்ரீ ஸ்வாமிகளின் ஆசிகளுடன் புனரமைக்கப்பட்ட பொதுக் குளத்தினையும் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மக்கள் நடை பயிற்சிக்கான நடைமேடையையும் திறந்து வைத்து தலைமை நீதியரசர் கே.ஆர்.ஸ்ரீராம் உரையாற்றினார்.


அவர் தனது உரையில், கூறியதாவது:

நீர் அனைத்து உயிர்களுக்கும் வாழ்வாதாரம். மனித குலம் உட்பட அனைத்து உயிர்களுக்கும் தொடர்ந்து குடிநீர் கிடைத்திட கிராமங்களிலும் நகரங்களிலும் தொன்று தொட்டு குளங்களும் பொதுக் கிணறுகளும் பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போதும் கூட சிறிய மற்றும் பெரிய கிராமங்களில் பொதுக் கிணறுகள் உள்ளன. தண்டலம் கிராமத்தில், பராமரிக்கப்படாமல் இருந்த இந்த நீர்நிலையை திருத்தி புனரமைக்கும் நல்ல எண்ணத்திற்கு செயல் வடிவம் தந்த அனைவருக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ப்ரத்யக்ஷா ட்ரஸ்டுக்கும் எனது பாராட்டுக்கள். ஊர் மக்களின் ஒற்றுமைக்கும் கூட்டுறவுக்கும் உறுதியான செயல்பாட்டுக்கும் புனரமைக்கப்பட்ட இந்த குளம் ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும். மேலும் குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைமேடை பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்துள்ளது. எனவே இந்நிகழ்சியில் தான் கலந்து கொள்வது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது என்றார். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் எந்த சவாலையும் சந்திக்கலாம், என்பதை அறிய வேண்டும். ஸ்ரீ சாஸ்திரிகளின் வேத வேதாந்த ஞானத்தையும் அறிவையும் ஆற்றலையும் போற்றி அவரது நூற்றாண்டினை, ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்களின் ஆசியுடன், கொண்டாடும் அவரது மைந்தர்களின் தூய எண்ணத்துடன் கூடிய பொது நலத் தொண்டினை பாராட்டுகிறேன்.
இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

மேலும், நீதியரசர் தமது பள்ளிப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் அவரது அன்னையும் தந்தையும் தந்த அன்பு அறிவுரைகளை கேட்டு பின்பற்றியதாலேயே நடுத்தர குடும்பத்தில் பிறந்து கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தும், வாழ்க்கையில் நன்கு முன்னேற முடிந்தது, என்றார். அன்னையின் அறிவுரை நீதி தவறாது இருக்க வைத்திருக்கிறது. அப்பாவின் அறிவுரையோ, பெண்களை பெண்ணியத்தை மதிக்க வைத்துள்ளது என்று சிறு வயதில் தமக்கு அன்னை தந்தை வழங்கிய அறிவுரைகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பின்னர், மாண்புமிகு தலைமை நீதியரசர், தண்டலம் கிராமத்தில் ஸ்ரீசாஸத்ரியாரின் ஆசைப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேதபாடசாலை, கோசாலை முதலியவற்றை பார்வையிட்டு, வேதபாராயணத்துடன் தமக்கு வரவேற்பளித்த வேதம் பயிலும் மாணவர்களை வாழ்த்தினார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த பம்மல் ஸ்ரீ விஸ்வநாதன், ஸ்ரீ சாஸ்திரியாரின் குமாரர்கள் ரகு, பிரபாகர், ஸ்ரீதர் மற்றும் வரலட்சுமி குடும்மபத்தினர் செய்திருந்தனர்.
உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் காஞ்சி பாலு எனும் பாலசுப்பிரமணியன், ப்ரத்யக்ஷா ட்ரஸ்டி ஜெயராமக்ருஷ்ணன், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை விஸவநாதன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சேது. ராமச்சந்திரன், காமாக்ஷி கோவில் ஸ்ரீகார்யம் ஸ்ரீ சுந்தரேஸ்வர ஐயர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Advertisement