வக்ப் சட்டத்தை எதிர்த்து மே.வங்கத்தில் மீண்டும் வன்முறை: போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு

7

கோல்கட்டா: வக்ப் சட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை அரங்கேறி உள்ளது.


@1brமேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. முர்ஷிதாபாதில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட, போலீசார் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.


இந் நிலையில் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்துள்ளது. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் இந்திய மதச்சார்பற்ற முன்னணியினர் போராட்டத்தில் இறங்கினர்.


இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள் மத்திய கோல்கட்டாவில் உள்ள ராம்லீலா மைதானத்தை நோக்கி சென்றனர். அவர்கள் மத்தியில் மதச்சார்பற்ற முன்னணி தலைவரும், பங்கர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான நௌஷாத் சித்திக் உரையாற்றினார்.


அப்போது,போலீசாருக்கும், மதச்சார்பற்ற முன்னணியினருக்கும் இடையே மோதல் மூண்டது. இதில், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காவல்துறை வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.


நிலைமை மோசம் அடைவதை உணர்ந்த போலீசார், லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சிறிதுநேரத்தில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement