என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

63

தஞ்சாவூர்: '' என்னை துருப்பு சீட்டாக வைத்து தி.மு.க., கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்கு போட்டு தோற்று போகியுள்ளனர். தற்போது பழைய உத்தியை கையில் எடுத்துள்ளார்கள்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: தி.மு.க., தொடர்ந்து ஆட்சியில் இருக்கிற ஒரு அரசியல் இயக்கம். அக்கட்சிக்கு இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற தேவை இல்லை. அந்தளவு தி.மு.க., பலவீனமாக இல்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தி.மு.க.,வை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதை தி.மு.க., எதிர்கொள்ளும். ஆனால், தி.மு.க.,வும் நாமும் பேசுகிற அரசியல் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதை வேடிக்கை பார்க்க முடியாது.



என்னிடம் கூடுதலாகத் தொகுதி தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம். தி.மு.க., அணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசைகாட்டினார்கள். விடுதலை சிறுத்தை இது போன்ற அரசியல் நகர்வுகளுக்கு இடமளித்தது இல்லை. அசைத்து பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் வி.சி.க., இல்லை.


வளைந்துக்கொடுப்பதால் முறித்து விடமுடியும் என நினைத்தார்கள். வளைந்து கொடுப்பது எல்லாம் முறிந்து விடாது எனப் புரிந்துக்கொண்டார்கள். திருமாவளவன் மோர் பிளக்சபில் பட் மோர் ஸ்ட்ராங். என்னை யாரும் முறித்து, உடைத்து முடியாது.


என்னை ஒரு துருப்பு சீட்டாக வைத்து தி.மு.க., கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்கு போட்டு தோற்று போயுள்ளனர். தற்போது பழைய உத்தியை கையில் எடுத்துள்ளார்கள்.


அ.தி.மு.க., கூட்டணியை அமித்ஷா தலைமை தாங்கி அறிவிக்கிறார். அ.தி.மு.க.,வை பழனிசாமி தலைமை தாங்குகிறார் என்றால், அவர் தான் கூட்டணியை அறிவித்து இருக்க வேண்டும். அப்படி அறிவித்து இருந்தால், பழனிசாமி சுதந்திரமாக முடிவு எடுத்து இருக்கிறார் என நம்ப முடியும்.


2026ம் ஆண்டு தேர்தல் நமக்கு ஒரு சோதனை. திராவிட அரசியலை வீழ்த்துவோம் என்பதை விட, சமூக நீதி அரசியலை வீழ்த்த வேண்டும் என்கிற முயற்சி. அ.தி.மு.க., கூட்டணியில் அவர்களின் தொகுதியை பறித்து, அதில் பெறும் வாக்குகளைத் தங்களின் வாக்குகள் எனப் பா.ஜ., கூற நினைக்கிறது. ஒரு பெரிய திராவிட இயக்கமான அ.தி.மு.க.,வை அழித்து விட்டால், அடுத்த பெரிய சக்தியான தி.மு.க.,வை வீழ்த்தி விட முடியும் என்பது அவர்கள் கணக்கு.


இவ்வாறு திருமாவளவன் பேசினார்

Advertisement