உடனடியாக வெளியேறுங்கள்: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

4

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 30 நாட்களுக்குள் தாமாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள், கைது செய்யப்பட்டு, கைவிலங்கு மாட்டி விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இந்த உத்தரவை ஏற்க மறுப்பவர்கள், அபராதம் மற்றும் சிறை தண்டனைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அதிபர் டிரம்ப் சொல்லும் செய்தி - தாமாக முன்வந்து உடனடியாக வெளியேறுங்கள்.

இதனால் கிடைக்கும் பலன்



*தாமாக முன்வந்து வெளியேறுவது பாதுகாப்பானது. நீங்கள் செல்லவிருக்கும் விமானத்தை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யலாம்.

*அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்லலாம்.

*எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கு வரும் வாய்ப்பை பெறலாம்.

*ஒருவேலை அவ்வாறு வெளியேற முடியாதவர்கள், சலுகை விலையில் விமான பயணத்துக்கான வாய்ப்பினை பெறலாம்.



பின்விளைவுகள்





*தாமாக வெளியேறாதவர்கள் அடையாளம் கண்ட உடன் அவர்கள் நாடு கடத்தல் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்


*நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான இறுதி உத்தரவை பெற்றபின்பு, நாள் ஒன்றுக்கு 998 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும். நீங்கள் வெளியேறுவதாகக் கூறிவிட்டு அதை செய்யவில்லை என்றால் 1,000 முதல் 5,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும்.

*தாமாக வெளியேறாவிட்டால், சிறை தண்டனைக்கு ஆளாகலாம்.

*அதேபோல், தங்களைப் பதிவு செய்யாதவர்கள், அமெரிக்காவுக்கு மீண்டும் வர தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement