பெண் டி.எஸ்.பி., குற்றங்கள் நிரூபணம்

பெங்களூரு : பா.ஜ., ஆட்சியின் போது, போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது. இதில் பெண் வக்கீலும், தொழில் முனைவருமான ஜீவா விசாரிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த நவ., 22ம் தேதி, ஜீவா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், 'விசாரணை அதிகாரியான போலீஸ் டி.எஸ்.பி., கனகலட்சுமி தன்னை நிர்வாணமாக்கி விசாரித்ததாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சமாக 25 லட்சம் ரூபாய் கேட்டார்' என தற்கொலைக்கு முன்பு குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து டி.எஸ்.பி., கனகலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. கடந்த 11ம் தேதி கனகலட்சுமி கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2,300 பக்கம் கொண்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், விசாரணை அதிகாரியான கனகலட்சுமி, வக்கீல் ஜீவாவை தாக்கியதும், அவரை மன ரீதியாக துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

வக்கீல் ஜீவாவை விசாரித்த பல வீடியோக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதில், தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்களும் உள்ளது.

இதனால், பெண் டி.எஸ்.பி., மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

Advertisement