கற்பனை உலகில் வாழும் முதல்வர் ஸ்டாலின்; உயர்நிலைக் குழுவை விமர்சித்த அண்ணாமலை

48

சென்னை: "தி.மு.க., அமைத்த பல குழுக்களில் இதுவும் ஒன்று. கற்பனை உலகில் முதல்வர் ஸ்டாலின் வாழ்கிறார்" என மத்திய -மாநில அரசு உறவு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவை பா. ஜ., தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார். தமிழக மக்கள் தனது ஆட்சிக்கு பாராட்டு மழை பொழிகிறார்கள் என்று நம்புகிறார். வரி பணம் தவறாகப் பயன்படுத்தி வீணடிக்கப்படுகிறது. மத்திய-மாநில உறவுகளை மறுபரிசீலனை செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை அமைக்கும் தீர்மானத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றி உள்ளார்.


2021ம் ஆண்டு முதல் தி.மு.க., அமைத்த பல குழுக்களில் இதுவும் ஒன்று. தமிழக அரசு வரி பணத்தை வீணடிக்கும் முன், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தக் குழுக்களுக்கு எவ்வளவு செலவிட்டுள்ளது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை என்ன என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்.


சட்டசபையில் இன்று நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு தனது கட்சியினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான காந்திசெல்வன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார் என்பதை அவர் முதலில் தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும்.


2013ம் ஆண்டு தி.மு.க., காங்கிரஸ் அரசுதான் நீட் தேர்வை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தது. 2017ம் ஆண்டு நீட் தேர்வை மறுசீரமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது யார் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும், 2014ம் ஆண்டுக்குள் எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் தவித்தனர் என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.


தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில், 1969ல், மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தார். இக்குழு, 1971ம் ஆண்டு மே மாதம், தமிழக அரசுக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

ராஜமன்னார் கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்றான, மாநிலத்திற்கான மத்திய வரிப் பங்கை அதிகரிப்பது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பெரிய அளவில் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் 2015ம் ஆண்டு பிரதமர் மோடி செயல்படுத்தினார்.

2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மத்திய அரசு தமிழகத்திற்கு ₹1,52,902 கோடி நிதி வழங்கியது. கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் இது ரூ.6,21,938 கோடியாக அதிகரித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த வாராந்திர நாடகத்தை நிறுத்திவிட்டு, சீர்குலைந்து கிடக்கும் ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் மனதார விரும்புகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement