'சிரிப்புடன் சிந்தனையை துாண்டுவதே நகைச்சுவை'

திருப்பூர்,: திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில், 'சிரிப்போம்... சிந்திப்போம்' நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

பொதுசெயலாளர் முரளி வரவேற்றார். சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், நகைச்சுவை முற்றத்தின் பொருளாளர் மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

'நாம் சிரித்தால் தீபாவளி' என்ற தலைப்பில், பேராசிரியர் ராமச்சந்திரன் பேசியதாவது:

தீபாவளி மத்தாப்பால், வீட்டுக்கும், நாட்டுக்கும் வெளிச்சம் கிடைக்கிறது; மனம் விட்டு சிரித்தால், அகமும், புறமும்வெளிச்சமாகிறது.

நகைச்சுவை முற்றத்தின் நிகழ்ச்சியால், மாதம் தோறும் திருப்பூரில் தீபாவளி போல் கொண்டாடுகிறோம். அருளுடன் பொருள் சம்பாதிக்க வேண்டும்; இன்று, அருள் இல்லாமல் பொருள் சேர்க்கின்றனர். அறிவான அதிகாரிகள் இருக்கும் துறைகளில் எப்படி லஞ்சம் பெருகுகிறது? அங்கு அன்பு இல்லாததால்லஞ்சம் வளர்கிறது.

மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை; மனதில் தான் இருக்கிறது. இன்பம் என்பது வேறு; மகிழ்ச்சி என்பது வேறு. சிறிய அளவில் மகிழ்வது மகிழ்ச்சி; இன்பம் என்பது நிலையானது.

சிரிப்பதால் மகிழ்ச்சி மட்டுமல்ல; இன்பமும் கிடைக்க வேண்டும். கேலியும், கிண்டலும் நகைச்சுவை ஆகாது; சிரிப்பு மட்டும் வரும். எந்தவொரு பேச்சு, சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கிறதோ, அதுவே நகைச்சுவை. சிரிப்பது மட்டும் நகைச்சுவை ஆகாது. இவ்வாறு, அவர் பேசினார்.

'அருளும் பொருளும்' என்ற தலைப்பில், பேராசிரியர் இந்திரா பேசினார்.

Advertisement