'போலீசாரை தாக்க தி.மு.க.,வுக்கு எங்கிருந்து வந்தது துணிச்சல்?'

4

சென்னை: 'போலீசாரை தாக்கும் அளவுக்கு, தி.மு.க.,வினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:



சென்னை வேளச்சேரியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்க இருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கொண்டிருந்த காவலர் காமராஜை, மது போதையில் இருந்த தி.மு.க.,வினர் கடுமையாக தாக்கிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

போலீசாரை தாக்கும் அளவுக்கு, தி.மு.க.,வினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் போலீசார் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என, தமிழகம் முழுதும் பார்த்து வருகிறோம்.

அந்த குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படாமல், போலீசாரின் கண்ணியம் காற்றில் பறக்க விடப்பட்டதால், போலீசார் மீது தி.மு.க.,வினரின் தாக்குதல் தொடர் கதையாகி இருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கிய காரணம், காவல் துறையின் கைகளை கட்டி போட்டிருப்பதே. தற்போது, காவல் துறை மீது தொடரும் தி.மு.க.,வினரின் தாக்குதலுக்கு என்ன சொல்ல போகிறார், அந்த துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement