இமயமலையில் அண்ணாமலை

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை, தி.மு.க., அரசு மற்றும் அமைச்சர்கள் மீது, தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அவரது பதவி காலம் முடிந்த நிலையில், தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் கடந்த 12ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார்.

மாநிலத் தலைவர் பதவியில் இருந்தபோது, சென்னை, கோவை, டில்லி என, சுழன்று வந்து, அதிரடி அரசியலில் ஈடுபட்ட அண்ணாமலை, மிகவும் பிசியாக இருந்தார். தற்போது, மாநிலத் தலைவர் பதவி இல்லாததால், ஓய்வு கிடைத்துள்ளது. அதனால், தன் ஆன்மிக பயணத்தை துவக்கி உள்ளார்.

நேற்று முன்தினம், டில்லி சென்ற அண்ணாமலை, அங்கிருந்து இமயமலையில் உள்ள பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு நண்பர் ஒருவருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம், வேகமாக பரவி வருகிறது. ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு, அடுத்த வாரம், டில்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement