பக்தர்களுக்கு சிரமமின்றி சித்திரை திருவிழா ஏற்பாடு தயாராகும் நெடுஞ்சாலைத்துறை

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் வசதிக்காக மேம்பால பணிகளால் இடையூறு ஏற்படாதிருக்க நெடுஞ்சாலைத் துறையினர் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

கோரிப்பாளையத்தில் நெடுஞ்சாலைத் துறையால் மேம்பாலம் கட்டுமான பணி நடக்கிறது. சித்திரை திருவிழா ஏப்.29ல் துவங்க உள்ளது. இதில் கள்ளழகர் மே 12 ல் வைகையில் இறங்கி, மீண்டும் அழகர்கோவில் செல்லும் மே 17 வரை வடபகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் பாலத்தின் கட்டுமான பொருட்கள் வடபகுதி ரோட்டிலும், வைகை ஆற்றுக்குள்ளும் கிடக்கின்றன.

தங்கக் குதிரையில் வரும் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்குவதே கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில்தான். அன்று மட்டும் பல லட்சம் பேர் குவிந்துவிடுவர். பாலத்தின் கட்டுமான பணிகளால், சுவாமியின் வருகை, பக்தர்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படலாம் என்பதால் சரிசெய்து தரும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமுக்கத்தில் இருந்து கோரிப்பாளையம் வரை தற்போது ஒருவழிப்பாதை உள்ளது. இப்பகுதியில் அமெரிக்கன் கல்லுாரி முன்புள்ள ரோடு பகுதி அடைபட்டுள்ளது.

அதில் பக்தர்கள் எளிதாக நடமாடும் அளவு சரிசெய்யும்படி உத்தரவிட்டுள்ளனர். அதேபோல வைகை ஆற்றுக்குள் புதிய பாலத்தில் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அங்கு பக்தர்கள் பாலத்தின் கட்டுமான பகுதியில் ஏறிவிடாத வகையில் திரைபோட்டு மூடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக சிலநாட்களுக்கு வைகையில் தண்ணீர் திறந்துவிடுவர். இத்தண்ணீர் கட்டுமான பகுதியில் தேங்கிநிற்காமல் செல்லும்வகையில் ஆற்றின் வலது, இடது ஓரங்களில் தலா 3 'பே' திறந்து விடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாக யோசனையை, மே 1 முதல் செயல்படுத்த உள்ளோம். அழகர் ஆற்றில் இறங்கும் ஓரிரு நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டு பின்னர் தொடரும். இந்தாண்டு இறுதிக்குள் பணியை முடிக்க உள்ளோம்' என்றனர்.

Advertisement