அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை விஸ்வ ஹிந்து பரிஷத் போராட்டம் தொடரும் என, மாநில பொதுச் செயலாளர் பாலமணிமாறன் கூறினார்.

விழுப்புரத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அமைச்சர் பொன்முடியின் பேச்சு காணொலியில் வந்ததும் விஸ்வ ஹிந்து பரிஷத் உடனடியாக 2 அறிக்கையை விட்டது. அவர் அமைச்சர் பதவியில் இருந்து உடனே நீக்கப்பட வேண்டும். பகிரங்கமாக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எங்களின் கோரிக்கை, அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

ஏனென்றால், இவர் மக்களுக்கான அமைச்சர். ஒரு சார்புநிலை எடுக்கக்கூடாது. இவர் பேசிய பேச்சுகள் விவரிக்க இயலாதது. ஒவ்வொரு ஹிந்துவையும், பெண்களையும் புண்படுத்த கூடியதாகும்.

இவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை இந்த அமைப்பின் போராட்டம் தொடரும்.

விஸ்வ ஹிந்து பரிஷத் ஒவ்வொரு சூழ்நிலையிலும் போராட்டம் மூலமே வெற்றி கண்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, சென்னையில் நடத்திய பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் பெற்று பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

அதே போல் இந்த நிகழ்வும் அடுத்தடுத்த கட்ட போராட்டத்திற்கு எடுத்துச் செல்வோம். தமிழகம் முழுதும் இந்த போராட்டமும், சட்ட போராட்டமும் நடைபெறும்.

இவ்வாறு பால மணிமாறன் கூறினார்.

Advertisement