இலவச மின் இணைப்பு விதிமுறை விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர்; விவசாய மின் இணைப்புக்கான புதிய விதிமுறைக்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மாநிலத்தில், 21 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

''விவசாய நிலங்களில், சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும், 'மோட்டார் பம்ப்' அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு, இலவச விவசாய மின் இணைப்பு தரப்பட மாட்டாது'' என, சமீபத்தில் மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு, பல்வேறு விவசாய அமைப்புகளும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன.களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறியதாவது:

ஆண்டுதோறும் இலவச மின் இணைப்பு வழங்க, அரசின் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்த பின், இணைப்புக் கிடைக்க ஓரிரு ஆண்டுகளாகி விடுகிறது.

கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான இடங்கள், மானாவாரி விவசாய நிலங்களாக உள்ள நிலையில், நிலத்தடி நீரை நம்பி தான் விவசாயிகள் உள்ளனர். தற்போது, அத்திக்கடவு திட்டத்தால், குளம், குட்டைகள் நிரம்பி வரும் நிலையில், பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், விளைபொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும் பட்சத்தில், அதை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில், இலவச மின் இணைப்பு கிடைக்கும் வரை, தற்காலிக ஏற்பாடாக, 2, 3 லட்சம் ரூபாய் செலவழித்து, சோலார் மின் பேனல் அமைத்துக் கொள்கின்றனர்.

சோலார் மின் பேனல் வைத்துள்ளவர்களுக்கு, இலவச மின் இணைப்பு கிடையாது என்ற மின்வாரிய அறிவிப்பு, அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement