கலைப்பண்பாட்டு துறை சார்பில் 20ம் தேதி ஓவியப்பயிற்சி முகாம்

திருப்பூர்; திருப்பூரில், கலைப்பண்பாட்டு துறை சார்பில் ஓவியப்பயிற்சி, வரும், 20ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில், ஏப்., 15 அன்று, உலக ஓவிய தினம் கொண்டாடப்படுகிறது. கலைப்பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்களில், ஓவிய கலையை ஊக்குவிக்கும் வகையில், ஓவிய பயிற்சிப்பட்டறை மற்றும் ஓவிய கண்காட்சி முகாம் நடத்தப்பட இருக்கிறது. வரும், 20ம் தேதி, திருப்பூர், ஊத்துக்குளி சாலை, மண்ணரை, கருமாரம்பாளையம் நகரவை நடுநிலைப்பள்ளி வளாகத்தில், காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை ஓவியப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதில், மரபு சார்ந்த ஓவியங்கள், துணி, கண்ணாடி, காகிதம், பானை, மர ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், உலரும் மெழுகு மற்றும் உலரா மெழுகு ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான ஓவியங்களும் இடம் பெறும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.

முகாமில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 5 வயது முதல், 16 வயது வரையுள்ள ஓவிய ஆர்வம் உள்ள சிறுவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விவரமறிய, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை 96779 65555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் சிறந்த ஓவியர்கள் பங்கேற்று ஓவிய முறைகள் குறித்த செயல்முறை விளக்கம், பயிற்சி வழங்கவுள்ளனர். இந்த வாய்ப்பை திருப்பூரைச் சேர்ந்த ஓவிய ஆர்வமுள்ள சிறுவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement