ரன்யா கைது சட்டவிரோதமானது உயர் நீதிமன்றத்தில் வக்கீல் வாதம்

பெங்களூரு: துபாயில் இருந்து 12 கோடி ரூபாய் தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்து உள்ளார். நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி விசாரிக்கிறார். நேற்று நடந்த விசாரணையில் ரன்யா சார்பில் ஆஜரான வக்கீல் சந்தேஷ் சவுதா வாதிட்டதாவது:

சுங்க சட்டத்தின்படி 1 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை, சட்டவிரோதமாக கொண்டு வருவாரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்து, உள்ளூர் நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் மனுதாரரை கைது செய்து, ஒரு நாளுக்கு பின் தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இதனால் கைது சட்டவிரோதமானது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருக்கும் நேஹா சாட்சியாகவும் உள்ளார். இதை ஏற்க முடியாது.

மனுதாரரை கைது செய்வதற்கு முன்பு, அவரது உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கைதுக்கான காரணத்தை, எழுத்துபூர்வமாக தெரிவித்து இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. கைது செய்து ஒரு நாள் கழித்து அவரது கணவரிடம், மொபைல் போனில் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்த காரணங்களை எல்லாம் கருத்தில் கொண்டு மாஜிஸ்திரேட், செஷன்ஸ் நீதிமன்றங்கள் ஜாமின் வழங்கி இருக்கலாம். ஆனால் மனுதாரரின் ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நீதிமன்றம் ஜாமின் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் மதுகர், மனுதாரர் தரப்பு வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆட்சேபனை தாக்கல் செய்ய, கால அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement