அமெரிக்காவில் கார் மோதிய விபத்து; பட்டம் பெறச் சென்ற இந்திய மாணவி பரிதாப பலி

12


வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். பட்டம் பெறுவதற்கு முன்னர் அவர் உயிரிழந்தது, சக மாணவர்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீப்தி(24). ஆந்திராவில் நரசராவ் பேட்டை பொறியியல் கல்லூரியில் பிடெக் பட்டம் பெற்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டமேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். இதற்காக பெற்றோர் சொந்த நிலத்தை விற்று பணம் ஏற்பாடு செய்தனர். வடக்கு டெக்சாஸ் பல்கலையில் பட்ட மேற்படிப்பு படித்தார். படிப்பு முடிந்த நிலையில் அடுத்த மாதம் பட்டம் பெற இருந்தார்.


இந்நிலையில், கடந்த 12ம் தேதி டெண்டான் பகுதியில் ஸ்நீக்தா என்ற தோழியுடன் தீப்தி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தீப்தி உயிரிழந்தார். ஸ்நீக்தா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அவரது உடலை, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் திங்கட்கிழமை அன்று, தீப்தி உடல் குண்டூர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீப்தியின் மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement