வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: சென்னை ஜி.எஸ்.டி., சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

1

சென்னை: சென்னையில் ஜி.எஸ்.டி., சாலையில் 3 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு;


ஜி.எஸ்.டி., சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிச்சாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படுவதால் மேற்படி பணி நடைபெறும் இடங்களில் ஏப்.20 முதல் ஏப்.22 வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.


* தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

• சைதாப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணாசாலை, செனடாப் சாலை வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

• ஜி.கே.எம். பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். மேலும் காந்தி மண்டபம் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

*இதேபோல், ரத்னா நகர் பிரதான சாலையும் செனடாப் சாலையில் இருந்து ஒரு வழிப்பாதையாக இருக்கும். அண்ணாசாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.

*மேலும் அண்ணாசாலையில் இருந்து செனடாப் 1வதுதெருவில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் செனடாப் 1வது பிரதான சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.

* கோட்டூர்புரத்தில் இருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்படும். அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம். பாலம் சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

*சீரான போக்குவரத்தினை உறுதி செய்வதற்காக அண்ணாசாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்படும்.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement