மேற்கு வங்க வன்முறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்

புதுடில்லி: பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என மேற்கு வங்க வன்முறை குறித்து தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து உள்ளது.


வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, மேற்கு வங்கம் முர்ஷிதாபாதில் 11ம் தேதி கலவரம் வெடித்தது. இந்துக்களின் வீடுகள், கடைகளை சூறையாடினர். மூன்று பேர் கொல்லப்பட்டனர். உயிர் பயத்தில் 400க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பக்கத்து மாவட்டமான மால்டாவில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


முர்ஷிதாபாத் கலவரத்தின் போது, பெண்கள், குழந்தைகள் மீது தாக்குல் நடத்தப்பட்டது தொடர்பாக, மால்டா முகாம்களில் தங்கியுள்ள பெண்கள், குழந்தைகளிடம் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹாத்கர் விசாரணை நடத்தினார். பெண்களுக்கு ஆறுதல் கூறினார்.

விஜயா ரஹாத்கர் கூறும்போது, பெண்கள், குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்துள்ளது. ஏராளமானோரை வலுக்கட்டாயமாக வீடுகளை விட்டு வெளியேற்றி உள்ளனர்.

பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன. பலரது வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. தனி நபர் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. முழு விசாரணையும் முடிந்த பின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனக்கூறினார்

Advertisement