ஒரு மணி நேரம் கன மழை குளிர்ச்சியான காலநிலை

ஊட்டி: ஊட்டி நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் நேற்று பகல், ஒரு மணி நேரம் நீடித்த கனமழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக ஓரளவு மழை பெய்து வந்தாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று பகல், ஊட்டி நகரம், முத்தோரை பாலாடா, தொட்டபெட்டா, மைனலை , கட்டபெட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால், உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தவிர, ஊட்டி நகரில் உள்ள முக்கிய நீர் ஆதாரங்களிலும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், ஊட்டி- கோத்தகிரி சாலையில், மதுவானா சந்திப்பு முதல், தொட்டபெட்டா வரை, கொட்டும் மழையில், சுற்றுலா வாகனங்கள், இருப்புறங்களிலும் அணிவகுத்து நின்றதால், அரை மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீசார், உடனுக்குடன் நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Advertisement