துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!

36

புதுடில்லி: டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கரை சந்தித்து பேசி உள்ளார்.



தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், அது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்தும், நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கவர்னரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கர், 'ஜனாதிபதிக்கே சுப்ரீம்கோர்ட் உத்தரவிடுகிறது, நாட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது' என்று கருத்து கூறி இருந்தார்.


இந்த கருத்து விமர்சனங்களை எழுப்பிய நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கரை டில்லியில் கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இன்று நிகழ்ந்து இருக்கிறது.


சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. தன்கர் சந்திப்பை தொடர்ந்து, மத்திய சட்டத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் ரவி சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது.


மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சுப்ரீம் கோர்ட் கெடு விதித்து இருந்த நிலையில் நிகழ்ந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. துணை ஜனாதிபதி தன்கர், மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இரு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் அளித்த தீர்ப்பு குறித்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க கோரிக்கை வைப்பது அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி சட்ட வல்லுநர்களுடன் கவர்னர் ஆலோசிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement