தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி

39


சேலம்: ''தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.


சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த கட்சி கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக கட்சியை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து சென்ற அண்ணாமலைக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறது என்று அறிந்து, அதை ஏற்று கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். தேர்தலுக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

வெற்றி கூட்டணி




தலைமை சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும். கூட்டணி குறித்து ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தால், அது வேறு விதமாக போய்விடும். நமது கூட்டணி உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. வெற்றி கூட்டணி.

வெற்றி




எங்களது நியாயமான கூட்டணி, ஊழல் இல்லாத கூட்டணி. தே.ஜ., கூட்டணி ஆட்சி வருவதற்கு பாடுபட வேண்டும். பூத் கமிட்டியில் இருப்பவர்கள் வேலை செய்கிறார்களா என்று பாருங்கள். பூத்தை செம்மை படுத்தினால் தான் வெற்றி அடைய முடியும்.
எத்தனை தொகுதி, எப்படி கூட்டணி என்பதை எல்லாம் நாம் சொல்ல முடியாது. அமித்ஷா, இ.பி.எஸ்., சேர்ந்து முடிவு எடுப்பார்கள். எனக்கு அதிகாரம் தொண்டர்களை பாதுகாப்பது தான்.



எங்களது தொண்டர்களுக்கு காலில் அடிபட்டால், அது எனக்கு கண்ணிலே ஏற்படும் வலி போன்றது. நான் தொண்டர்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்சியை வளர்க்க வேண்டும். தமிழக அரசுக்கு அதிகாரம் வேண்டும், தமிழக மக்கள் அதிக பயன் அடைய வேண்டும். மத்திய அரசிடன் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி வர வேண்டும் என்பதில் தமிழக பா.ஜ., உறுதியாக இருக்கிறது. கச்சத்தீவை பிரதமர் மோடி நினைத்தால் தான் மீட்க முடியும்.

இவர்கள் வெற்று தீர்மானம் போட்டு ஒன்றும் பயன் இல்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.


முன்னதாக, நயினார் நாகேந்திரனுக்கு, வேல் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement