போன் பேச்சு ஒட்டு கேட்கும் தமிழக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

39


கோவை: ''தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது'' என்று மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.


தமிழக பா.ஜ.,தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கோவை வருகை தந்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கூட்டணியை பற்றியும், எத்தனை சீட் என்பதை பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். அது குறித்து பேஸ்புக், ட்விட்டரில் பதிவு போட வேண்டாம். அது பற்றி பேச வேண்டியது அகில இந்திய தலைமை. அவர்கள் முடிவு செய்வர்.

பேஸ் புக், டிவிட்டரில் போட்டாலும் எப்படியாவது கைது செய்ய வேண்டும், போனில் பேசினாலும் ஒட்டு கேட்க தயாராகி வருகின்றனர். தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது. யார் என்ன செய்கிறார்கள் என்பதை தி.மு.க, அரசு கண்காணிக்கிறது. பா.ஜ., தொண்டர்கள் எல்லோரும் போனில் கொஞ்சம் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.



இரட்டை இலையோடு, அதிக அளவில் எம்.எல்.ஏ.,க்கள் வரும் தேர்தலில் வெற்றி பெறுவர். 2026 ல், அவுட் ஆப் கன்ட்ரோலில் தான் தி.மு.க., இருக்கும். ஹரியானாவுக்கும், டில்லிக்கும், மத்திய பிரதேசத்துக்கும், உ.பி.,க்கும் அமித்ஷா சென்றார். அங்கு எல்லாம் பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்தார். தமிழகத்துக்கு வந்துள்ளார்; இங்கும் பா.ஜ., ஆட்சியை கொண்டு வருவார்.


பா.ஜ.,வை வலுப்படுத்தியதில், முன்னாள் தலைவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அ.தி.மு.க., தலைவர்களோடு, தொண்டர்களோடு பயணிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் கட்சியாக வர வேண்டும். நம் சனாதன தர்மத்தையும், வேதமந்திரங்களையும் பாதுகாக்க வேண்டும். இன்னுமொரு முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நம்மை நாமே பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு, நயினார் நாகேந்திரன் பேசினார்.


முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அவரை சாரட் வண்டியில் 1 கி.மீ.,துாரம் வரை, மேளதாளம், ஆடல்களுடன் அழைத்து வந்து வரவேற்றனர். நிகழ்ச்சியில், பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், பொது செயலாளர் முருகானந்தம், மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ.,க்கள் வானதி, சரஸ்வதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement