நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா; 'இன்டர்போல்' உதவியை நாடும் வங்கதேசம்!

7


டாக்கா: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு பதியப்பட்டது.

அவருக்கு எதிராக கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி கடந்த ஆண்டே துாதரகம் வாயிலாக மத்திய அரசிடம் அந்நாடு வலியுறுத்தியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.



இந்நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனா மட்டுமின்றி மேலும் 12 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இன்டர் போல் என்றால் என்ன?



'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement