நீதித்துறை குறித்து எம்.பி.,க்கள் கருத்து: பா.ஜ., நிராகரிப்பு

24


புதுடில்லி: ''நீதித்துறை குறித்து எம்.பி.,க்கள் கருத்தை நிராகரிக்கிறோம்''என பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டா தெரிவித்துள்ளார்.


ஜார்கண்ட் மாநிலம் கோட்டா லோக்சபா தொகுதி எம்.பி., நிஷிகாந்த் துபே. இவர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கடுமையாக விமர்சித்து இருந்தார். இவர், ''சுப்ரீம் கோர்ட் தனது அதிகார வரம்பை தாண்டி செயல்பட்டு வருகிறது.


அனைத்து விஷயங்களுக்கும் ஒருவர் சுப்ரீம்கோர்ட் செல்ல முடியும் என்றால், பார்லிமென்ட், சட்டசபையை இழுத்து மூட வேண்டும்'' என கூறி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நிஷிகாந்த் துபேயின் கருத்திற்கு பா.ஜ., எம்.பி., தினேஷ் ஷர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் நிஷிகாந்த் துபேயின் இந்த கருத்துக்கு நட்டா விளக்கம் அளித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் நட்டா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து பா.ஜ., எம்.பி.,க்கள் நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுடன் பா.ஜ.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்களின் தனிப்பட்ட கருத்துகள்.




இந்த கருத்தை பா.ஜ., ஏற்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை. இந்த கருத்துகளை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். பா.ஜ., எப்போதும் நீதித்துறையை மதித்து வருகிறது, அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது. ஏனெனில், ஒரு கட்சியாக, சுப்ரீம்கோர்ட் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இவ்வாறு நட்டா கூறியுள்ளார்.

Advertisement