நெசவாளர் உதவித்தொகை விவகாரம்; தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை:நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் உதவித்தொகை ரூ.1000 த்திலிருந்து ரூ.2000 ஆக உயர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
அவரது அறிக்கை:
ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விசைத்தறியாளர்கள், அரசு கொடுத்த உத்தரவாதங்களினால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர் என்ற செய்தி நிம்மதி அளிக்கிறது.
தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கால் பாதிக்கப்படுபவர்களின் பக்கம் என்றுமே தமிழக பா.ஜ., துணை நின்று, அவர்களுக்கான நீதியை பெற்றுத் தரும் தோழனாக செயல்படும் என்று உறுதி அளிக்கிறேன்!
கோவை- திருப்பூர் மாவட்டங்கள் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக நெசவினை மையத் தொழிலாக வைத்து இயங்குகின்றன. பல லட்சம் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும், தேசத்தின் வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு உழைத்து வருகின்றன.
இந்நிலையில் , மூன்று முறை உயர்த்தப்பட்ட மினகட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது வழங்கப்படும் கூலி மிக மிகக் குறைவு என்பதால் கூலி உயர்வு கேட்டு பலகட்ட கோரிக்கைகளையும், பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டார்கள் விசைத்தறியாளர்கள்.
இறுதியில், எந்த விமோட்சமும் கிடைக்காததால், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் வாரக்கணக்கில் போராடியும், அதைக் கண்டு கொள்ளாமல் காலம் கடத்தியது தி.மு.க., அரசு.
நேற்றைய முன் தினம், கோவை மாவட்டம் சோமனுாரில் நடைபெற்ற விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை வெற்றியடைய நான் துணை நிற்பேன் என்று வாக்குறதி கொடுத்தேன். போராட்டக் குரலுக்கு அரசு செவிசாய்க்காத போது நானும் அவர்களுடன் இணைந்து போராடுவேன் என்று அறிவித்தேன்.
போராட்டக்காரர்களோடு தமிழக பா.ஜ., துணை நிற்கிறது என்று அறிந்த அடுத்த 24 மணி நேரத்தில் விசைத்தறியாளர்களின் முதற்கட்ட கோரிக்கைக்கு செவி மடுத்துள்ளது அம்மக்களுக்கும் அவர்களோடு துணை நின்ற பா.ஜ.,விற்கும் கிடைத்த வெற்றி.
துவக்கத்திலேயே துறை அமைச்சர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு போய் போராட்டத்தை வாபஸ் பெற வைத்திருக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இந்த ஒரு மாதகால போராட்டத்தையும் அதனால் வந்த இழப்புகளையும், விசைத்தறியாளர்கள் சந்தித்த மன உளைச்சல்களையும் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் உழைக்கும் மக்கள் பிரச்னைகளைப் புறக்கணிக்கும் விதமாகவே தமிழக அரசு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதே அணுகுமுறையையே விசைத்தறியாளர் விவகாரத்திலும் கடைபிடித்தது.
எனினும், நெஞ்சுரத்துடன் உரிமைக்காகத் தளராமல் போராடி வென்ற விசைத்தறியாளர்களுகு்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுநாள் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறியாளப் பெருமக்கள் தங்களின் உடல் நலத்தைத் தேற்றுவதில் சற்று கவனம் செலுத்த வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தமிழக நெசவாளர்களுக்கு தி.மு.க., அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.
குறிப்பாக, நெசவாளர்களக்கான தனிக் கூட்டுறவு வங்கி, நெசவாளர்களுக்குத் தயைின்றி நுால் கிடைக்கும் வகையில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைப்பு, நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் உதவித்தொகை ரூ.1000 த்திலிருந்து ரூ.2000 ஆக உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.





மேலும்
-
மஹா. அரசியலில் திடீர் திருப்பம்: காங். முக்கிய தலைவர் பா.ஜ.வில் சேர முடிவு
-
நீலகிரியில் 4 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
-
புதிய போப் தேர்வு நடைமுறைகளை தொடங்கிய கத்தோலிக்க திருச்சபை
-
பிரீமியர் லீக் போட்டி: குஜராத் அணி பேட்டிங்
-
தி.மு.க, முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
சியாச்சின் எல்லையில் ராணுவ வீரர் வீர மரணம்; அஞ்சலி செலுத்திய தலைமை தளபதி