தி.மு.க, முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

8

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கி உள்ளது.



ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ரூ.2000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்தியதாக கடந்தாண்டு மார்ச் 9ம் தேதி திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க., முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். பின்னர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கிலும் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பிதிவு செய்தது. போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு கடந்தாண்டே டில்லி போதைபொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.


ஆனால், அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்ததால் சிறையில் தொடர்ந்து அவர் இருந்து வந்தார். இதே வழக்கில் ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரையும் கைது செய்தது.


அமலாக்கத்துறை வழக்கில் இருந்த ஜாமின் கோரி ஜாபர் சாதிக்கும், அவரது சகோதரர் முகமது சலீமும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட, சென்னை ஐகோர்ட்டில் இருவரும் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந் நிலையில், இந்த வழக்கில் இன்று (ஏப்.21) தீர்ப்பளித்த ஐகோர்ட், இருவருக்கும் ஜாமின் அளித்து தீர்ப்பளித்தது. டில்லி மாஜி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வழக்கை முன் உதாரணமாக வைத்து இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement