குடிநீர் ஊருணி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

காரைக்குடி: கானாடுகாத்தான் பேரூராட்சியில் பழமையான குடிநீர் ஊரணி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, காலிக் குடங்களுடன் வந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கானாடுகாத்தான் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்கு பாரம்பரிய செட்டியார் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் உள்ள குடிநீரை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குடிநீர் ஊரணி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னாள் பேரூராட்சி தலைவர் சிதம்பரம் கூறுகையில், கானாடுகாத்தான் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சாக்கடையே இல்லாத ஊருக்கு பாதாள சாக்கடை திட்டம் எதற்கு என்று அத்திட்டம் ரத்தானது.

நீண்ட பெரிய தெருக்களுடன், பாரம்பரிய வீடுகள் அதிக அளவில் அமைந்துள்ளன. இதனால் கழிவுநீர் வெளியே செல்ல அவசியம் இல்லை. இங்குள்ள செட்டியார் ஊரணி பாரம்பரிய குடிநீர் ஊரணியாகும், இதன் அருகே, ரூ.6.88 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது.

இதன் மூலம் குடிநீர் ஊரணி மாசு அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் பாரம்பரிய குடிநீர் ஊரணி அழிவதற்கு வாய்ப்பு உள்ளது. கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகும்.

வரத்துக்கால்வாயோ, குடிநீர் ஊரணியோ பாதிக்காத வகையில் வேறு இடத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல் அலுவலர் கவிதா கூறுகையில், பேரூராட்சிக்கு சொந்தமான வள மீட்பு பூங்கா அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது. நீண்ட துாரத்தில் இருப்பதால் ஊரணிக்கும் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் சம்பந்தமில்லை. வரத்து கால்வாயும் பாதிக்கப்படாது என்றார்.

Advertisement