பலாத்காரம் பற்றி வீடு, வீடாக நோட்டீஸ் பா.ஜ., முனிரத்னாவுக்கு சுரேஷ் எச்சரிக்கை

பெங்களூரு : “பெண்ணை பலாத்காரம் செய்தது பற்றி வீடு, வீடாக சென்று நோட்டீஸ் வழங்க, காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக உள்ளனர்,” என, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

முதல்வர் சித்தராமையாவுக்கு அரசியலில் பரந்த அனுபவம் உண்டு. காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து 137 எம்.எல்.ஏ.,க்களை மக்கள், தேர்வு செய்துள்ளனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையால், எந்த சமூகத்திற்கும் அநீதி நடக்காமல் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கை உள்ளது.

ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, அரசியல் லாபத்திற்காக துணை முதல்வர் சிவகுமாரை விமர்சிக்கிறார். சிவகுமார் மீது கவர்னர், லோக் ஆயுக்தா, உச்ச நீதிமன்றத்தில் புகார் செய்கிறார்.

இப்படி எல்லாம் செய்து ஹீரோ ஆக முடியாது. நியாயப்படி பார்த்தால் முனிரத்னாவை, ராஜ்பவனுக்குள் நுழைய கவர்னர் அனுமதித்திருக்கக் கூடாது.

வயிறு எரிகிறது



மக்களுக்காக கட்டப்பட்ட விகாஸ் சவுதாவில் வைத்து, அமைச்சராக இருந்தபோது, பெண்ணை ஐந்து முறை பலாத்காரம் செய்தவர் முனிரத்னா. இதுபற்றி ஊடகங்கள் பேச மறுப்பது ஏன்?

அவர் முன்பு மைக்கை நீட்டி ஏதேதோ பேசவிட்டு, பெரிய ஆள் ஆக்கிவிடுகிறீர்கள். இதை பார்க்கும்போது சில நேரத்தில் என் வயிறு எரிகிறது.

எந்த தவறும் செய்யவில்லை என்று சத்தியம் செய்வதாக கூறுகிறார். பொய் சத்தியம் செய்வதில் நிபுணர் அவர். அவரை மக்கள் எம்.எல்.ஏ., - அமைச்சர் ஆக்கியது, விகாஸ் சவுதாவில் வைத்து பலாத்காரம் செய்யவா?

பா.ஜ., தலைவர்களுக்கு முனிரத்னா மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லையா? வெட்கமே இல்லாமல் அவரையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு சுற்றுகின்றனர்.

காலில் விழுவார்



சக அரசியல்வாதிகளுக்கு ஹெச்.ஐ.வி., பரப்ப முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. தினமும் இரவு மாத்திரை போட்டு துாங்குவதாக சொல்கிறார். அவருக்கு துாக்கம் வரவில்லை என்றால், நாங்கள் என்ன செய்வது?

தினமும் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து, யாருக்கு இன்று தொந்தரவு கொடுக்கலாம் என்று யோசிக்கும் நபர் அவர். ஒக்கலிக சமூக பெண்ணை பற்றி, கீழ்தரமாக பேசினார். அவருக்கு வேலை நடக்க வேண்டும் என்றால், யார் காலில் வேண்டும் என்றாலும் விழுவார்.

மெண்டல் போன்று பேசும் முனிரத்னா கருத்துக்கு, எங்களால் பதில் சொல்ல முடியாது. ஒழுங்காக வாயை மூடிக்கொண்டு வேலை செய்ய வேண்டும். இல்லா விட்டால் அவர் செய்த பலாத்காரம் பற்றி, ஆர்.ஆர்.நகரில் வீடு, வீடாக சென்று நோட்டீஸ் வழங்க, காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement