சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்த சிக்கல்!

சென்னை: ரூ.1.40 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்.


தமிழக நீர்வளத் துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், 1996- 2001ம் ஆண்டில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக, 3 கோடி, 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, 2002ல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.


நேற்று (ஏப்ரல் 23) இந்த வழக்கில், அமைச்சர் துரைமுருகன், அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என, வேலுார் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், இன்று (ஏப்ரல் 24) சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்த இன்னொரு உத்தரவும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரூ.1.40 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்க்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



2017ம் ஆண்டு, இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.


''இந்த வழக்கில் வேலூர் சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்'' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement