மாநில கூடைப்பந்து போட்டி 8 அணிகள் 'லீக்' சுற்றுக்கு தகுதி
சென்னை, மாநில கூடைப்பந்து போட்டியில் இருபாலரிலும், வருமான வரி, எஸ்.டி.ஏ.டி., உட்பட எட்டு அணிகள், 'லீக்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
மயிலாப்பூரில் உள்ள ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 19ம் ஆண்டாக மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்து வருகிறது.
'நாக் அவுட்' போட்டிகள், பெரியமேடு, நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இதில், ஐ.சி.எப்., - இந்தியன் வங்கி, வருமான வரி, ரைசிங் ஸ்டார் உட்பட ஆண்களில் 72, பெண்களில் 32 என, மொத்தம் 104 அணிகள் பங்கேற்றுள்ளன.
பெண்களுக்கான போட்டியில், தமிழக போலீஸ் அணி 55 - 28 என்ற கணக்கில், பீனிக்ஸ் இந்தியாவையும்; ரைசிங் ஸ்டார், 81 - 16 என்ற கணக்கில் ஐ.சி.எப்., காலனியையும்; வருமான வரி, 63 - 44 என்ற கணக்கில், ஓசியானிக் கிளப்பையும் தோற்கடித்தன.
ஆண்களில் இந்திய வங்கி அணி, 97 - 70 என்ற கணக்கில் அரைஸ் அணியையும், வருமான வரி 102 - 72 என்ற கணக்கில் வி.கே., ஜெயராமன் அணியையும் வீழ்த்தின.
அனைத்து 'நாக் அவுட்' போட்டிகள் முடிவில், பெண்களில் ரைசிங் ஸ்டார்ஸ், வருமான வரி, எஸ்.டி.ஏ.டி., - தமிழக போலீஸ்; ஆண்களில் இந்தியன் வங்கி, வருமான வரி, எஸ்.டி.ஏ.டி., - ஐ.சி.எப்., ஆகிய எட்டு அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.
'லீக்' போட்டிகள், தி.நகரில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.