கம்பம் கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை

கம்பம்: கம்பம் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. பால் உற்பத்தியில் தேனி மாவட்டம் பிரதான இடத்தை பெறுகிறது. கேரள தனியார் நிறுவனங்கள் தினமும் இங்கிருந்து 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது.

ஆவின் ஒரு லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. போடி, தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களில் மட்டுமே மருத்துவமனைகள் உள்ளன. தேனி அருகே கால்நடைமருத்துவ பல்கலை உள்ளது. தேவைக்கு ஏற்ப மருத்துவமனைகள், மருந்தகங்கள் இல்லை.

கிராமங்களில் கிளை நிலையங்கள் இருந்தாலும் பணியாளர்கள் இல்லாததால் பயனில்லை.

உத்தமபாளையம் தாலுகாவில் கால்நடை மருத்துவமனை இல்லை. கம்பம் கால்நடை மருந்தகம், மருத்துவமனையாக மாற்ற தகுதி உள்ளது என கால்நடை பராமரிப்பு துறை பரிந்துரை செய்தது.

அதை ஏற்று கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, கம்பம் மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும், மருத்துவமனையாக தரம் உயர்த்தவில்லை. தரம் உயர்த்தப்பட்டால் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கால்நடைகளுக்கு இங்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கிய தேவைகள் நிறைவேறும்.

எனவே கம்பம் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு உத்தரவிட வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement